சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி! (கோயில் (சிதம்பரம்) ) Audio: https://sivaya.org/thiruvaasagam/04 Potri Thiruagaval Thiruvasagam.mp3 |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.104  
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி! (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நிலைமண்டில ஆசிரியப்பா
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நால்திசைமுனிவரும் ஐமுலன் மலரப் போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று) அடி முடி அரியும் ஆதர வதனிற் | [1] |
கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து) ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து) ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள், வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில், | [2] |
யானை முதலா எறும்பு ஈறு ஆய, ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்; மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து, ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்; ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்; | [3] |
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்; மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்; ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்; அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்; ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்; | [4] |
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்; எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்; ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்; தக்க தச மதி தாயொடு தான் படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்; | [5] |
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்; காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்: கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில் | [6] |
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து, கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து, எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து, ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம் கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்: | [7] |
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்; கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்; செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்; நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்; | [8] |
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்; தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி, முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின; | [9] |
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி, நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்; சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும் விரதமே பரம் ஆக, வேதியரும், | [10] |
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்; சமய வாதிகள் தம் தம் மதங்களே அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்; மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து, | [11] |
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின் கலா பேதத்த கடு விடம் எய்தி, அதில் பெரு மாயை எனைப் பல சூழவும், தப்பாமே, தாம் பிடித்தது சலியா, தழல் அது கண்ட மெழுகு அது போல, | [12] |
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து, ஆடியும், அலறியும், பாடியும், பரவியும், கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும் படியே ஆகி, நல் இடை அறா அன்பின், பசு மரத்து ஆணி அறைந்தால் போல, | [13] |
கசிவது பெருகி, கடல் என மறுகி, அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப, நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை பூண் அதுவாக, கோணுதல் இன்றி, | [14] |
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும் கதியது பரம அதிசயம் ஆக, கற்றா மனம் எனக் கதறியும், பதறியும், மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது, அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து, | [15] |
குருபரன் ஆகி, அருளிய பெருமையை, சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை, பிறிவினை அறியா நிழல் அது போல, முன் பின் ஆகி, முனியாது, அத் திசை என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி, | [16] |
அன்பு எனும் ஆறு கரை அது புரள, நன் புலன் ஒன்றி, நாத' என்று அரற்றி, உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப, கர மலர் மொட்டித்து, இருதயம் மலர, கண் களி கூர, நுண் துளி அரும்ப, | [17] |
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி, வளர்த்தனை போற்றி! மெய் தரு வேதியன் ஆகி, வினை கெட, கைதர வல்ல கடவுள், போற்றி! ஆடக மதுரை அரசே, போற்றி! | [18] |
கூடல் இலங்கு குருமணி, போற்றி! தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி! இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி! மூவா நான்மறை முதல்வா, போற்றி! சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி! | [19] |
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி! கல் நார் உரித்த கனியே, போற்றி! காவாய், கனகக் குன்றே, போற்றி! ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி! படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி! | [20] |
இடரைக் களையும் எந்தாய், போற்றி! ஈச, போற்றி! இறைவ, போற்றி! தேசப் பளிங்கின் திரளே, போற்றி! அரைசே, போற்றி! அமுதே, போற்றி! விரை சேர் சரண விகிர்தா, போற்றி! | [21] |
வேதி, போற்றி! விமலா, போற்றி! ஆதி, போற்றி! அறிவே, போற்றி! கதியே, போற்றி! கனியே, போற்றி! நதி சேர் செம் சடை நம்பா, போற்றி! உடையாய், போற்றி! உணர்வே, போற்றி! | [22] |
கடையேன் அடிமை கண்டாய், போற்றி! ஐயா, போற்றி! அணுவே, போற்றி! சைவா, போற்றி! தலைவா, போற்றி! குறியே, போற்றி! குணமே, போற்றி! நெறியே, போற்றி! நினைவே, போற்றி! | [23] |
வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி! ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி! மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை ஆழாமே அருள் அரசே, போற்றி! தோழா, போற்றி! துணைவா, போற்றி! | [24] |
வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி! முத்தா போற்றி! முதல்வா, போற்றி! அத்தா, போற்றி! அரனே, போற்றி! உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி! விரி கடல் உலகின் விளைவே, போற்றி! | [25] |
அருமையில் எளிய அழகே, போற்றி! கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி! மன்னிய திருஅருள் மலையே, போற்றி! என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல் சென்னியில் வைத்த சேவக, போற்றி! | [26] |
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி! அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி! அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி! முழுவதும் இறந்த முதல்வா, போற்றி! மான் நேர் நோக்கி மணாளா, போற்றி! | [27] |
வானகத்து அமரர் தாயே, போற்றி! பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! | [28] |
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி! அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி! கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி! நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி! இடைமருது உறையும் எந்தாய், போற்றி! | [29] |
சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி! சீர் ஆர் திருவையாறா, போற்றி! அண்ணாமலை எம் அண்ணா, போற்றி! கண் ஆர் அமுதக் கடலே, போற்றி! | [30] |
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி! பாகம் பெண் உரு ஆனாய், போற்றி! பராய்த்துறை மேவிய பரனே, போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி! மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி! | [31] |
குற்றாலத்து எம் கூத்தா, போற்றி! கோகழி மேவிய கோவே, போற்றி! ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி! பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி! கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி! | [32] |
அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி! இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு, அத்திக்கு, அருளிய அரசே, போற்றி! தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! | [33] |
ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி! மானக் கயிலை மலையாய், போற்றி! அருளிட வேண்டும் அம்மான், போற்றி! இருள் கெட அருளும் இறைவா, போற்றி! தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி! | [34] |
களம் கொளக் கருத அருளாய், போற்றி! அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி! நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி! அத்தா, போற்றி! ஐயா, போற்றி! நித்தா, போற்றி! நிமலா, போற்றி! | [35] |
பத்தா, போற்றி! பவனே, போற்றி! பெரியாய், போற்றி! பிரானே, போற்றி! அரியாய், போற்றி! அமலா, போற்றி! மறையோர் கோல நெறியே, போற்றி! முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி! | [36] |
உறவே, போற்றி! உயிரே, போற்றி! சிறவே, போற்றி! சிவமே, போற்றி! மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி! பஞ்சு ஏர் அடியாள் பங்கா, போற்றி! அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி! | [37] |
இலங்கு சுடர் எம் ஈசா, போற்றி! கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி! குவைப்பதி மலைந்த கோவே, போற்றி! மலை நாடு உடைய மன்னே, போற்றி! கலை ஆர் அரிகேசரியாய், போற்றி! | [38] |
திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி! பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி! அருவமும், உருவமும், ஆனாய், போற்றி! மருவிய கருணை மலையே, போற்றி! துரியமும் இறந்த சுடரே, போற்றி! | [39] |
தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி தோளா முத்தச் சுடரே, போற்றி! ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி! ஆரா அமுதே, அருளே, போற்றி! பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி! | [40] |
தாளி அறுகின் தாராய், போற்றி! நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி! சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி! சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி! மந்திர மா மலை மேயாய், போற்றி! | [41] |
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி! புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி! அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி! கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி! இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி! | [42] |
படி உறப் பயின்ற பாவக, போற்றி! அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி! நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல், பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி! ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி! | [43] |
செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி! கழுநீர் மாலைக் கடவுள், போற்றி! தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி! பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி! | [44] |
புரம் பல எரித்த புராண, போற்றி! பரம் பரம் சோதிப் பரனே, போற்றி! போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்! போற்றி! போற்றி! புராண காரண! போற்றி! போற்றி! சய, சய, போற்றி! (225) | [45] |